Friday, April 1, 2011

கவியும் கருத்தும்-2

திருவருட்பா (4090) - அருள்மாலை விளக்கம்
இராமலிங்க அடிகள்
அருள்விளக்கே! அருட்சுடரே! அருட்சோதிச் சிவமே!
     அருள்அமுதே! அருள்நிறைவே! அருள்வடிவப் பொருளே!
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே!
     என்அறிவே! என்உயிரே! எனக்கினிய உறவே!
மருள்கடிந்த மாமணியே! மாற்றறியாப் பொன்னே!
     மன்றில்நடம் புரிகின்ற மணவாளா! எனக்கே
தெருள்அளித்த திருவாளா! ஞானஉரு வாளா! 
     தெய்வநடத் தரசே!நான் செய்மொழிஏற் றருளே!
பொருள்    
அருள்விளக்காகவும்,சுடராகவும்,சோதியாகவும் விளங்குகின்ற ஒளிமயமான பரம்பொருளே! அருள் அமுதாகவும், அவ்வமுது குறையாமல் நிறைந்துள்ள பொருளாகவும், ஞான வடிவமாகவும் விளங்குகின்ற இறைவனே! என் உள்ளத்து இருளை நீக்கி அவ்விடத்தே நிலைத்து நின்று என்னை ஆட்கொண்ட தலைவனே! என்னுடைய அறிவாகவும், உயிராகவும், எனக்கு இனிய உறவாகவும் விளங்குகின்ற பெருமானே! மாயை முதலிய மயக்கங்களை நீக்கியருளிய மாணிக்கமே! இவ்வுலகில் ஈடு இணையில்லாப் பொருளே! அம்பலத்தில் ஆடுகின்ற மணவாளனே! எனக்கு ஞான விளக்கத்தைத் தந்த திருவாளனே! அந்த ஞானத்தின் வடிவாய் விளங்குபவனே! என்னுடைய சொல்மாலையை ஏற்று அருள் செய்க!

No comments:

Post a Comment