Sunday, March 20, 2011

கவியும் கருத்தும்

சூரியன் வருவது யாராலே?
நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்பிள்ளை
          சூரியன் வருவது யாராலே?
               சந்திரன் திரிவதும் எவராலே?
          காரிருள் வானில் மின்மினிபோல்
                கண்ணிற் படுவன அவைஎன்ன?
           பேரிடி மின்னல் எதனாலே?
                 பெருமழை பெய்வதும் எவராலே?
            யாரிதற் கெல்லாம் அதிகாரி?
                  அதைநாம் எண்ணிட வேண்டாவோ?            1

           தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
                  தரையில் முளைத்திடும் புல் ஏது?
           மண்ணில் போட்டது விதையொன்று
                  மரஞ்செடி யாவது யாராலே?
           கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்
                 கருவில் வள்ர்பதுயார் வேலை?
           எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
                 ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?              2

           எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
                எத்தனை ஊர்வன பறப்பனபார்!
           எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!
               எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
           எத்தனை நிறங்கள் உருவங்கள்!
              எல்லா வற்றையும் எண்ணுங்கால்
           அத்தனை யும்தர ஒருகர்த்தன்
              யாரோ எங்கோ இருப்பதுமெய்.                    3

           அல்லா வென்பார் சிலபேர்கள்;
               அரன் அரியென்பார் சிலபேர்கள்;
           வல்லான் அவன்பர மண்டலத்தில்
               வாழும் தந்தையென்பார்கள்;
           சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
               என்றும் சிலபேர் சொல்வாகள்;
           எல்லா மிப்படிப் பலபேசும்
               ஏதொ ஒருபொருள் இருக்கிறதே!                 4
           

          அந்தப் பொருளை நாம்நினைத்தே
              அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,
          எந்தப் படியாய் எவர் அதனை
              எப்படித் தொழுதால் நமக்கென்ன?
          நிந்தை பிறரைப் பேசாமல்
              நினைவிலும் கெடுதல் செய்யாமல்
          வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;
              வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.             5
                       
   பொருள்
உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்திற்கும், மின்மினிப் பூச்சியைப் போல் கரிய இருள் சூழ்ந்த வானத்தில் மின்னும் ஏராளமான நட்சத்திரங்களின் ஒளிக்கும், இடி, மின்னல் மற்றும் மழை ஆகியவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். அதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
     தண்ணீர் தரையில் விழுந்ததும் புல் முளைப்பதற்கும், மண்ணில் போட்ட விதையானது மரம், செடியாக மாறுவதற்கும், நம் கண்களுக்குப் புலப்படாமல் கருவில் வளரும் குழந்தைக்கும் ஏதோ ஒரு விசை காரணமாக இருக்க வேண்டும்.
     உலகில் எத்தனையோ வகையான விலங்குகள், மீன்கள், ஊர்வன, பறப்பன, பூச்சிகள், புழு வகைகள், எண்ணிலடங்காச் செடி, கொடிகள் உள்ளன. அவற்றின் நிறங்களும், உருவங்களும் கூட வெவ்வேறானவை. இவை எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கும்போது, அவற்றிற்கு ஒரு கடவுள் எங்கோ இருப்பது உண்மையாகும்.
    அக்கடவுளை அல்லா, சிவன், திருமால், இயேசு, புத்தன், அருகன் என அவரவர்க்கு விருப்பமான முறைகளில் அழைக்கின்றனர். அவர் உருவமும் அருவமும் இல்லாதவர் எனவும், ஆதியும் அந்தமும் இல்லாதவர் எனவும் கூறுவர். ஆனால் கடவுள் ஒருவர்தான்.
    அந்தக் கடவுளை நினைத்து, அனைவரும் அன்பாய்ப் பழகிடுவோம். கடவுளை அவரவர்களுக்கு விருப்பமான முறைகளில் வணங்கினாலும், மற்றவரைப் பற்றிக் குறை கூறாமலும், மனதாலும் மற்றவர்க்குத் தீங்கு நினைக்காமலும், அக்கடவுளர்களை வரவேற்போம். வணங்குவோம். நலமாய் வாழ்ந்திடுவோம்.

4 comments:

The Indian Arts & Cultural Foundation said...

அருமையான பாடல்...எக்காலத்திற்கும் பொருந்தும்...

balakrishnan said...

எக்காலததிற்கும் பொருத்தமான பாடல்

ABS said...

இன்றைய சூழலில் இதனை பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வரும் பாட நூல் ஹலில் வைக்க வேண்டும்

Unknown said...

1990ல்நான் படித்த ஒன்றாம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

Post a Comment